| ADDED : மார் 03, 2024 05:48 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மாநில அளவில் வரி வசூலில் கடந்தாண்டு முதலிடம் பிடித்ததை தக்க வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் 100 சதவீத வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வீடு, தொழில், குடிநீர், குத்தகை, குப்பை உட்பட பல்வேறு வரியினங்கள் வசூலிப்பதில் மாநில அளவில் பல ஆண்டுகளாக முதலிடம் பெற்று வந்தது. ஆனால், 2020 கொரோனா காலம் முதல் 100 சதவீதம் வரி வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 2022-ல் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட துவங்கியதால் கடந்த ஆண்டு 100 சதவீதம் வரி வசூல் செய்து மாநில அளவில் முதலிடம் என்ற சிறப்பினை பெற்றது.அதனைப் போல் இந்த ஆண்டு 100 சதவீதம் வரி வசூல் செய்வதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதற்காக காலை 8:00 மணிக்கே 33 வார்டுகளிலும் நகராட்சி ஊழியர்கள் வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் சனி, ஞாயிற்றுக்கிழமையிலும் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வரி வசூலில் ஈடுபட்டது.இதனால் நேற்றைய விவரப்படி சுமார் 90 சதவீதத்தை தாண்டி வரி வசூல் வந்துள்ளது. இதன் மூலம் தற்போது மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மீதமுள்ள 10 சதவீத வரி இனங்களையும் வசூலித்து, மாநிலத்தில் 100 சதவீதம் வரி வசூலித்த முதல் நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமையடையும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.