விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் ரோடும், ராமமூர்த்தி ரோடும் இணையும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு அவசரமாக செல்லும் பலர் பாதிக்கப்படுவது தொடர் கதையாக மாறியுள்ளது.விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடும், ராமமூர்த்தி ரோடும் இணையும் சந்திப்பில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி, கல்குறிச்சி, மல்லாங்கிணர், பாண்டியன் நகர், அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்லும் ஆட்டோர், கார், வேன், பஸ்கள் இவ்வழியாக மேம்பாலத்தில் ஏறி இறங்கி சென்று வருகின்றன.மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு முக்கியமான இடமாக உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பணிகளில் ஈடுபடும் போலீசாரை எல்லா நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை.ஏற்கனவே போக்குவரத்து போலீசார் எண்ணிக்கை பற்றாக்குறை நிலவுவதால் ஸ்டேஷன்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்த சந்திப்பு ரோட்டில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.