மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதுக்கடை பஜாரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மந்தகதியில் நடப்பதால் அந்த வழியே செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ.297.25 கோடியில் துவங்கப்பட்டது. முதலில் புறநகர் பகுதிகளான நெசவாளர் காலனி, கணேஷ் நகர், அன்பு நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, சொக்கலிங்கபுரம், புதுக்கடை பஜார் ஆகிய இடங்களில் பணிகள் துவங்கியுள்ளன. புதுக்கடை பஜார் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிக்கு நடந்தும் டூவீலர்களில் வந்து செல்வர். இந்தப் பகுதியில் சம்ப் அமைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆங்காங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் மாணவர்கள் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. பணிகளும் மந்த கதியில் நடப்பதால் இதன் வழியாக செல்ல மக்கள் திணற வேண்டியுள்ளது. முக்கியமாக மக்கள் வந்து செல்கின்ற இடங்களில் பணிகளை இரவு நேரங்களில் விரைவாக முடிக்க உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.