| ADDED : டிச 04, 2025 04:18 AM
வத்திராயிருப்பு:வ. புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 6 செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சேத்துார், செட்டியார்பட்டி, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு, கொடிக்குளம், வ.புதுப்பட்டி, மல்லாங்கிணறு, காரியாபட்டி என 9 பேரூராட்சிகள் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் தனித்தனி அலுவலர்கள் இல்லாமல் இரண்டு பேர் ஒரே பேரூராட்சியை நிர்வாகிக்கும் நிலை கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள வ. புதுப்பட்டி பேரூராட்சியில் 3 ஆண்டுகளில் முகமது இப்ராகிம், ராதாகிருஷ்ணன், பிரேமா, சந்திரகலா, சரவணன், கணேசன் என 6 செயல் அலுவலர்கள் பணியாற்றி உள்ளனர். இதனால் நிரந்தர செயல் அலுவலர்கள் இல்லாமல் தினசரி மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள், மக்களின் மனுக்களுக்கு கையெழுத்திடுதல் போன்ற பணிகள் கால தாமதமாக நடந்து வருகிறது இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தங்கள் பேரூராட்சிக்கு நிரந்தரமான செயல் அலுவலர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வ. புதுப்பட்டி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.