| ADDED : ஜூலை 27, 2011 10:29 PM
சிவகாசி : ரேஷன் கார்டு பெற தவறான முகவரி கொடுப்போர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் எச்சரித்து உள்ளார். அரசின் இலவசங்களை பெறும் நோக்கில் சிலர், புதிய ரேஷன் கார்டுகளை பெற ஆர்வம் காட்டுகின்றனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் சிலர், வேறு பெயர் மற்றும் மாற்று முகவரியில் புதிய கார்டு பெற விண்ணப்பிக்கின்றனர். இதனால், ரேஷன் கார்டுக்கு மனுக்கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன்காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்குவதில், சிவில் சப்ளை துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனிடையே, ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், பொதுமக்களை எச்சரிக்கை ஏற்படுத்தவும் தாலுகா அலுவலங்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில்,''ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஆண்டுக்கு 2000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. தவறான விபரங்கள், முகவரியை கூறி, ரேஷன் கார்டு வாங்குவது ரேஷன் பொருட்களை கடத்துவதற்கு உடந்தையாக அமையும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.எனவே, புதிய ரேஷன் கார்டு கோரி மனுச்செய்பவர்கள் சரியான பெயர்களை பூர்த்தி செய்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்,'' என, குறிப்பிடப்பட்டுள்ளது