உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் சிகிச்சை தென் மாவட்டங்களில் விருதுநகர் தேர்வு

பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் சிகிச்சை தென் மாவட்டங்களில் விருதுநகர் தேர்வு

விருதுநகர்: பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் சிகிச்சை வழங்க கோவை, கடலுார், விருதுநகர் மாவட்டங்கள் முதற் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில் தோல் நிறம், அமைப்பில் மாற்றம் ஏற்படல், சிவத்தல், கொப்புளங்கள், வெட்டுக்கள், வீக்கம், ஈரப்பதம், கசிவு வெளியேற்றம், துர்நாற்றம் இருப்பது, நரம்பு சேதத்தால் ஏற்படும் கால்களில் உணர்வு இழப்பு, கால்களில் கூச்ச உணர்வு, படபடப்பு வலி, எரிதல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால் இழப்புகளை தடுக்க முடியும்.இந்த பாதிப்புகள் உள்ளவர்களை மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் கண்டறிந்து அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆரம்ப கட்ட சிகிச்சை, தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர்.மேலும் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் சிகிச்சை வழங்க கோவை, கடலுார், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிகிச்சை வழங்க எதுவாக நியூரோ டச்' என்ற மருத்துவ சாதனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.தென் மாவட்டங்களிலேயே விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக கட்டனுார், ஆமத்துார், பாலவநத்தம், எம்.ரெட்டியப்பட்டி, முடுக்கன் குளம் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 'நியூரோ டச்' வழங்கப்பட்டுள்ளது.இதற்காக மருத்துவ அலுவலர், செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் ஆகியோருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான சிகிச்சையை பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை