காத்திருப்பு போராட்டம்
சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலகத்தில் நகர, வட்டார காங். கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்துாரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது ஆண் குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதற்காக ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வலியுறுத்தி பெற்றோருடன் நேற்று காலை 10:30 மணிக்கு காங். நகரத் தலைவர் அய்யப்பன், சட்ட சபை தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் உள்ளிட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் ராஜா மணி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்து ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.