உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம் இணைப்பு சாலைக்காக கண்மாய் கலுங்கில் நீர் வெளியேறும் ஓடை அடைப்பு

ராஜபாளையம் இணைப்பு சாலைக்காக கண்மாய் கலுங்கில் நீர் வெளியேறும் ஓடை அடைப்பு

ராஜபாளையம்; ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பணிகளின் போது கண்மாய் கலுங்கு வழி நீர் வெளியேறும் ஓடை அடைபடுவதால் தண்ணீர் தேங்கி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே சங்கரன் கோவில் ரோட்டில் இருந்து கொல்லம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பு சாலைக்கான பணி பிப். 12ல் ரூ.38.34 கோடி மதிப்பீட்டில் 2.10 கி.மீ துாரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.இதற்காக பெரியாதி குளம் கண்மாய் ஒட்டிய பாசன பகுதி நில எடுப்பு பணி முடிந்து தற்போது முதல் கட்டமாக 10 மீட்டர் அகலத்திற்கான சாலை வரையும் சமப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. இதன் அருகே பெரியாதிகுளம் கண்மாய் பாசன மடை, உபரி நீர் வெளியேறும் கலுங்குடன் அமைந்துள்ள நிலையில் கண்மாயிலிருந்து கலுங்கல் வழி ஓடையை உரிய நீர்வழி பாலம் அமைக்காமல் சாலை பணி நடைபெறுகிறது. இதனால் கண்மாயிலிருந்து கசிவு நீர் சாலைக்காக தோண்டப்பட்டுள்ள பக்கவாட்டு பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதே நிலை காணப்பட்டால் மழைக்காலங்களில் ரோடு சேதமாவதோடு அருகில் உள்ள கருங்குளத்திற்கு நீர் செல்வது பாதிக்கப்படும். இதுகுறித்து விவசாயி தர்மலிங்க ராஜா: சாலை அமைவிடத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளதால் 18 குறு பாலம், 1 சிறு பாலம் அமைக்க உள்ளதாக ஒப்பந்த பணி விளக்க குறிப்பு உள்ள நிலையில் பெரியாதிகுளம் கலுங்கல் உபரி நீர் ஓடை அடைபட்டுள்ளது. கோடை நேரத்திலேயே கண்மாயில் நீர் கசிவு ஏற்பட்டு தேங்கும் நிலையில் மழை பெய்தாலோ, கண்மாய் நிறைந்தாலோ பாதிப்பு அதிகரிப்பதுடன் அடுத்துள்ள கருங்குளம் கண்மாய்க்கான நீர் வரத்து பாதிக்கப்படும். அதிகாரிகள் சாலை பணிகளின் தொடக்கத்திலேயே நீர்வழிப் போக்கிற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை