உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் சிறு, குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி

தமிழக அரசின் சிறு, குறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடி

சென்னை:தமிழக அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்), மூலம், 3 சதவீத வட்டி தள்ளுபடியில், கடன் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதற்கு,தொழில்முனைவோரிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நீண்ட காலத் தவணையில், கடன் உதவி வழங்கும் பணியை, 'டிக்' நிறுவனம் செய்து வருகிறது. ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மின் சாதனங்கள், தோல் பொருட்கள், பொறியியல் சாதனங்கள் போன்றவை தயாரிப்பதற்கும், வாகனங்கள் வாங்கவும் கடன் வழங்குகிறது. அரிசி ஆலை நிறுவுதல், காற்றாலை மின் உற்பத்தி, கிடங்கு, திருமண மண்டபம், மருத்துவமனை போன்ற சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடத்துவோர், அதிகளவில் பயன் அடைந்து வருகின்றனர்.தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய பகுதியில், தொழில் தொடங்குவோருக்கு அரசு மானியமாக, 15 சதவீதம் அல்லது, 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 'டிக்' நிறுவனத்திடம் கடன் பெற்று, தொழில் துவக்கினால், அரசிடமிருந்து மானியத்தை பெற்று, இந்நிறுவனமே தருகிறது.மத்திய அரசு, சி.எல்.சி.எஸ்., என அழைக்கப்படும், 'கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி' எனும் மூலதனத்துடன் கூடிய மானியத்தை வழங்குகிறது. அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தையும் அரசிடமிருந்து,'டிக்' பெற்றுத் தருகிறது.ஜவுளித் துறையினர், பழைய தொழில் நுட்பத்திலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கு, மத்திய அரசு வழங்கும்,'டெக்னாலஜி அப்கிரடேஷன் பண்ட்' என்ற மானியத்தையும், 'டிக்' பெற்றுத் தருகிறது. இங்கு, 50 ஆயிரம் முதல் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில், குறைந்தபட்சம், 14.25 சதவீதமும், அதிகபட்சம், 15.75 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழக அரசு, பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 'டிக்' மூலம், 3 சதவீத வட்டி தள்ளுபடியில், கடன் வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வட்டி தள்ளுபடி செய்வதன் மூலம், கடன் பெறுவோர் எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் வட்டிச் சலுகை, புதிய கடனுக்கு மட்டுமல்லாமல், தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கும் வழங்க வேண்டும். மேலும், பெண் தொழில் முனைவோருக்கு, தள்ளுபடி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று, கடன் வழங்கி வந்த,'டிக்' நிறுவனத்திற்கு, வட்டி தள்ளுபடி மூலம் கூடுதல் சுமை ஏற்படும். இதை தமிழக அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து குறு, சிறு, நடுத்தர தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் ஒருவர் கூறியதாவது:ஆரம்ப காலத்தில், தொழில் துவங்க வங்கி கடன் என்பது சற்று சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில், தொழில் துறைக்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு முன்னுரிமையளித்து, புதிய தொழில் முனைவோர் தொழில் துவங்க, 'டிக்' பெரிதும் உதவி வருகிறது.நடைமுறை மூலதனம் பற்றாக்குறையாக இருப்பவர்களுக்கும் கடன் வழங்கப்படுவது, 'டிக்' நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு. தற்போது, 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது. புதிதாக கடன் வாங்கி தொழில் துவங்குபவர்களுக்கு மட்டுமில்லாமல், இருக்கின்ற தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் வட்டி தள்ளுபடி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.'டிக்' நிறுவனத்தின் செயல்பாடு:'டிக்' நிறுவனம், கடந்த, 2008-09ல், 1,262 தொழில்களுக்கு, 538 கோடி ரூபாய் கடன் அனுமதிக்கப்பட்டு, 416 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 381 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2009-10ல், 1,908 தொழில்களுக்கு, 668 கோடி அனுமதிக்கப்பட்டு, 570 கோடி வழங்கி, 495 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சென்ற நிதியாண்டில், 4,190 தொழில்களுக்கு, 939 கோடி அனுமதிக்கப்பட்டு, 735 கோடி வழங்கி, 709 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நடப்பாண்டில், 1,350 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி