உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துண்டுப் பிரசுரம், போஸ்டர்கள் அச்சடிக்க அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்கள் கூட்டம்

துண்டுப் பிரசுரம், போஸ்டர்கள் அச்சடிக்க அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்கள் கூட்டம்

தங்களுக்குரிய சின்னம் கிடைத்ததும் துண்டுப்பிரசுரங்களை அச்சடிப்பதற்காக, தனியார் அச்சகங்களில் குவிந்த வேட்பாளர்களின் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டமாக, தமிழகம் முழுக்க உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 'அதிருப்தி மற்றும் அட்ஜஸ்ட்மென்ட்' செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற பின், இறுதிக்கட்ட வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர்கள், வழக்கம் போல் கட்சியின் சின்னங்களில் போட்டியிடுவது உறுதியானது.

மற்றபடி, சுயேச்சைகளுக்கு 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இறுதிக்கட்ட பட்டியலில் தங்களுக்கு சின்னம் கிடைத்ததும், அதை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துண்டுப்பிரசுரம் மற்றும் போஸ்டர்களை அச்சடிக்க, வேட்பாளர்கள், அச்சகங்களுக்கு விரைந்தனர். இதனால், அங்கு கூட்டம் அலை மோதியது. ஆயிரம் துண்டுப் பிரசுரங்களுக்கு (சிங்கிள் கலர்) 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட, 'டிஜிட்டல்' பிரின்டிங் நோட்டீஸ்களுக்கு ரூ.2,000 முதல் 3,000 வரை கட்டணம் அதிகரித்தது. அங்கு உடனடியாக வேலை முடியாதவர்கள், 'டிடிபி' சென்டர்களில் விளம்பர பிரசுரங்களை தயாரித்து, அதை ஜெராக்ஸ் (நகல்) எடுத்து வாக்காளர்களுக்கு கொடுத்து, தங்கள் சின்னத்தை அறிமுகம் செய்தனர்.

மேலும் பலர், தங்களுக்குரிய சின்னங்களை நினைவுப்படுத்தம் வகையில், கைக்கடிகாரம், சங்கு, மூக்குகண்ணாடி, மை எழுதுகோல் (பேனா), என கவர்ச்சிகரமான பல பொருட்களை வாங்கி, வாக்காளர்களுக்கு பரிசாக அளிக்கத் துவங்கி விட்டனர்.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை