சிவகங்கை: வருமுன் காப்போம் முகாமிற்கு வழங்கிய நிதியில் முறைகேடு செய்ததாக, டாக்டர்கள் உட்பட 5 பேர் மீது சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள கிராமங்களில் 2009- 2010ம் ஆண்டில் வருமுன் காப்போம் முகாம் நடந்தது. இச்செலவினங்களுக்காக அரசு சார்பில் ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தாமல், வருமுன் காப்போம் முகாமிற்கு சென்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட செலவினங்களை செய்ததாக போலியாக ஓட்டல், பெட்டிக்கடைகளில் ரசீது பெற்று அரசுக்கு வழங்கியுள்ளனர். இது போன்று சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள் உட்பட பலர், அரசின் பணத்தை மோசடி செய்ததாகவும், இது குறித்து சுகாதாரத்துறையில் புகார் செய்யும் நடவடிக்கை இல்லாததாலும், உடனே நடவடிக்கைக்கு உத்தரவிடக்கோரியும் காரைக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் பாலுச்சாமி புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்துமாறு, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிதி மோசடியில் ஈடுபட்டதாக, அப்போது பணியில் இருந்த மருத்துவ அலுவலர் நபிஷாபானு, உதவி மருத்துவ அலுவலர் யோகா, சுகாதார ஆய்வாளர் ஷாஜகான், டிரைவர் சுந்தரபாண்டியன், டீக்கடைக்காரர் தைனீஸ் உள்ளிட்ட 5 பேர் மீது, குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., நாகராஜன் வழக்கு பதிந்தார். இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,'' இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி, சுகாதாரத்துறை இயக்குனருக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம்,'' என்றனர்.