சென்னை:''அடுத்த 10 ஆண்டுகளில், மருந்து கண்டுபிடிப்பு துறையில் இந்தியாவும், சீனாவும் உலக நாடுகள் மத்தியில் தனித்துவம் பெறும்'' என்று, இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் ராம் விஸ்வகர்மா கூறினார்.போரூர், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 14வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் ரங்கசாமி வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிய இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர். ராம் விஸ்வகர்மா பேசியதாவது:இன்றைய சூழலில், புதிய மருந்துகள் கண்டறியும் ஆய்வு, மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்கு, நடைமுறையில் உள்ள சில மருந்துகளின் பின்விளைவாக, மருந்துகள் திரும்ப பெறப்படுவதும் ஒரு காரணமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறி,இந்தியாவும், சீனாவும் மருந்து கண்டுபிடிப்பு துறையில் தனித்துவம் பெறும்.இதற்கு பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நோய் நிலை மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுடன், மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த வகையில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நம்மைக் காட்டிலும், சீனா முன்னிலை வகிக்கிறது.
இன்றைய சூழலில், ராமச்சந்திரா போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு வசதிகள் கொண்ட ஒரு பல்கலைக் கழகம், மருந்து தயாரிப்பு துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இவ்வாறு டாக்டர் ராம் விஸ்வகர்மா பேசினார்.சிறப்பு விருந்தினரை பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாச்சலம் கவுரவித்தார். 36 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும், 343 பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், 359 பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்ட இதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில் பல்கலைக் கழக இணைவேந்தர் தியாகராஜன், பதிவாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.