உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமண மண்டபம், விடுதிகள் கட்டுமானம் அறநிலைய துறையிடம் அறிக்கை கேட்பு

திருமண மண்டபம், விடுதிகள் கட்டுமானம் அறநிலைய துறையிடம் அறிக்கை கேட்பு

சென்னை:பக்தர்கள் வசதிக்காக, திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்டுமானம் தொடர்பாக, 16 கோவில்களின் நிதி ஆதாரம், நிலம், கட்டுமான அனுமதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை, அறநிலையத்துறை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவில்கள் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.இந்த அமர்வில், அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, கோவில் நிலத்தில் திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதை எதிர்த்து, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி கூறியதாவது:கடந்த 2021ல், 16 கோவில்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என, சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அந்த கோவில் நிதியில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் கட்டினால் ஏற்புடையது. ஆனால், ஒரு கோவில் நிலத்தில் மண்டபம், தங்கும் விடுதி கட்ட, வேறொரு கோவில் உபரி நிதி பயன்படுத்தப்படுகிறது. இது, அறநிலையத்துறை விதிகள், நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.உதாரணமாக, கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் விடுதி, திருமண மண்டபம் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு கட்டாமல் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ளும்படி, அத்தொகுதி எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி, அதிகாரிகள் அரசாணை பிறப்பித்துள்ளனர். அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க, எம்.எல்.ஏ.,வுக்கு என்ன அதிகாரம் உள்ளது? எம்.எல்.ஏ., உத்தரவின்படி, அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்பட்டது சட்டவிரோதமானது.இவ்வாறு அவர் கூறினார்.அதற்கு நீதிபதிகள், 'எந்த அடிப்படையில் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்; அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?' என்று, கேள்வி எழுப்பினர்.அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது:திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டும் விவகாரத்தில், மனுதாரர் குறிப்பிடும் எம்.எல்.ஏ., கோரிக்கை மட்டுமே வழங்கினார். துறை அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.அதிகாரிகளை யாரும் தவறாக வழிநடத்தவில்லை. தன் தொகுதி பக்தர்கள் வசதிக்காக, எம்.எல்.ஏ., என்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளார். பக்தர்கள் நலனுக்காக திருமண மண்டபம், விடுதிகள் கட்டப்படுகின்றன. அனைத்து அனுமதிகளும் பெற்ற பின் தான், கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த விதிமீறலும் இல்லை.இவ்வாறு அவர் வாதாடினார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்டுமானம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 16 கோவில்கள் நிதி ஆதாரம், நிலங்கள், பிற கோவிலிருந்து கடன் பெறுவது, கொடுப்பது, கட்டுமான அனுமதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை, அறிநிலையத்துறை இரண்டு வாரத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை