உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட்டில் முன்னாள் சபாநாயகர் ஆஜர்: ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

கோர்ட்டில் முன்னாள் சபாநாயகர் ஆஜர்: ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

துாத்துக்குடி : தமிழக மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 2001 -- 2006 அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த அவர், வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி, மகன்கள், சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் நேற்று நடந்தது.அமைச்சரின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். மேலும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுவும், நேற்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜரானார். எம்.எல்.ஏ., ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமானால் சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது. கடந்த 2011 அ.தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், அப்போதையை எம்.எல்.ஏ.,வான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு அனுமதி வழங்கி இருந்தார்.நீதிமன்றத்தில் ஆஜரான தனபாலிடம் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் மனோகரன், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் சேது ஆகியோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குறுக்கு விசாரணை செய்தனர்.தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ