சென்னை:ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணியருக்கான இ- - பாஸ் வழங்கும் நடைமுறையை, செப்.,30 வரை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு அமர்வு, கடந்த ஏப்ரலில், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு, எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது தொடர்பாக, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த குழு அறிக்கை கிடைக்கும் வரை, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானலுக்குள், இ- - பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நடைமுறை, மே, 7 முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் எனவும், உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ- - பாஸ் முறை குறித்து, திண்டுக்கல், நீலகிரி கலெக்டர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது தொடர்பாக, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இ- - பாஸ் வழங்கும் முறையை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம்,'' என்றார்.அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சீசன் இல்லாத காலங்களிலும் எவ்வளவு வாகனங்கள் வந்து செல்கின்றன என்ற விபரங்களையும் பெற வேண்டும் எனவும், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கான இ- - பாஸ் வழங்கும் நடைமுறை, செப்.,30 வரை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு
ரூ.20 அபராதம் நீலகிரிக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வரும் சுற்றுலா பயணியருக்கு, ஒரு பாட்டிலுக்கு, 20 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களை கொடைக்கானலுக்கு எடுத்து வரும் சுற்றுலா பயணியருக்கு, எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை கொடைக்கானலிலும் பின்பற்றும்படி, திண்டுக்கல் கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி உள்ளிட்ட வரியாக எவ்வளவு வசூலிக்கப்படுகிறது; அந்த தொகை எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.