| ADDED : ஜூலை 31, 2024 05:06 AM
மதுரை : வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிர்ணயித்த கட்டணத்தை அரசு பஸ்களில் வசூலிக்க அது குறித்த பட்டியலை அறிவிப்பு செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி மாவட்டம் திருவாசியைச் சேர்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு நிறுத்தத்திலிருந்து மற்றொரு நிறுத்தத்திற்கு பயணிகளிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிர்ணயிக்கின்றர். அக்கட்டண விபர பட்டியல் பஸ்களில் இடம்பெற வேண்டும். அதை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை.அந்தந்த போக்குவரத்துக்கழக நிர்வாகங்களே தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கின்றன. அக்கட்டண விபர பட்டியல் பஸ்களில் இடம்பெறுவதில்லை. இது சட்டவிரோதம். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிர்ணயித்த கட்டணத்தை அரசு பஸ்களில் வசூலிக்க, அது குறித்த பட்டியலை அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு போக்குவரத்துறை கமிஷனர், கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.