உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே டிக்கெட் வாங்க முடியலை பார்லி.,யில் பொங்கிய கனிமொழி

ரயில்வே டிக்கெட் வாங்க முடியலை பார்லி.,யில் பொங்கிய கனிமொழி

''ரயில் நிலையங்களில் போய், டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணிக்கிறீர்கள். அதுபோதாது என்று, சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆரம்பித்துள்ளீர்கள்,'' என மத்திய அரசை விமர்சித்து பேசினார் தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி. லோக்சபாவில், பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டில், இந்த ஆண்டு 2.5 சதவீதம் மட்டுமே, கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள பூடானில், 8 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், கல்விக்காக ஏராளமாக செய்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். கல்விக்காக அதிக நிதியை மாநில அரசுதான் தருகிறது. அதேநேரம் ஜி.எஸ்.டி.,யாக வரி வசூலிக்கும் மத்திய அரசு, மாநில அரசுக்கு தர வேண்டிய எதையும் தர மறுக்கிறது. மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு, மாநிலங்களுக்கு பிச்சை பாத்தித்தை கையில் கொடுத்துள்ளது மத்திய அரசு. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், தமிழகத்துக்கு நிதி தர வேண்டிய 500 கோடி ரூபாய் கல்வி நிதியை தர மறுக்கிறீர்கள். மாநிலத்தின் உரிமையைப் பறிக்க யாருக்கும் தகுதி இல்லை. குஜராத்தில் முதல்வராக இருந்த காலகட்டங்களில், மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் மனிதராக இருந்த பிரதமர் மோடியே, இன்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மனிதராக மாறிப் போய் இருக்கிறார். மொழிக் கொள்கையை வைத்து, தி.மு.க., நாடகம் ஆடுவதாக கூறி, விமர்சிக்கின்றனர். மொழிப் போராட்டத்திற்காக, உயிரை விட்டவர்கள் திராவிட இயக்கத்தவர். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 45ல், 15ல் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிக் கொள்கையில் நியாயம் அற்றவர்களாக பா.ஜ.,வினர் உள்ளனர். ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கால கட்டத்தில் தான், மதிப்புமிக்க பார்லிமென் டிலேயே, ஒரு எம்.பி.,யைப் பார்த்து இன்னொரு எம்.பி., உன்னுடைய ஜாதி என்ன என்று கேட்கும் சூழல் உருவாகி வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கூடுதல் வேதனை, குறிப்பிட்ட அந்த எம்.பி.,யின் பேச்சை, பிரதமரும் சேர்ந்து ஆதரிப்பதுதான். இவ்வாறு கனிமொழி பேசினார். -நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்