| ADDED : ஆக 01, 2024 10:25 PM
சென்னை:தினக்கூலி ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக, 882 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம், 535 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளர் பிறப்பித்த உத்தரவு: கடந்த 9ம் தேதி நடந்த வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜன., 2ல், தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படியும், தினக்கூலி உயர்த்தப்படுகிறது. இதன்படி, ஓட்டுனர், நடத்துனர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, 882 ரூபாய், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, 872 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.