சென்னை : 'செல்பி எடுத்தாலும், ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமா; 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியை தள்ளுபடி செய்யும் பா.ஜ.,வால், ஏழைகளுக்கு கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி., வரி அல்ல; வழிப்பறி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த முடியும் என, முதல்வராக எதிர்த்த மோடி பிரதமரானதும், ஜி.எஸ்.டி., பொருளாதார சுதந்திரம் என, 'ஒரே நாடு; ஒரே வரி' கொண்டு வந்தார். ஹோட்டல் முதல் டூ - வீலர் பழுது பார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.,யா? ஒரு நடுத்தர குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்கு சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டி., வரியை பார்த்து, 'கப்பார் சிங் டேக்ஸ்' என புலம்புகின்றனர். அடுத்து என்ன செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியை தள்ளுபடி செய்யும் பா.ஜ.,வால், ஏழைகளுக்கு கருணை காட்ட முடியாதா?ஜி.எஸ்.டி.,யில் கிடைக்கும் தொகையில் 64 சதவீதம், 50 சதவீத அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 33 சதவீதம் ஜி.எஸ்.டி., 40 சதவீத நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது. வெறும் 3 சதவீதம் ஜி.எஸ்.டி., மட்டும், 10 சதவீத பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர், ஆறு மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரி கட்டுகின்றனர். ஏழைகளை சுரண்டும் இந்த முறையை மாற்ற வேண்டும். 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.