| ADDED : ஜூலை 20, 2024 02:33 AM
சென்னை : 'அண்டை மாநிலங்களுக்கு, விதிகளுக்கு புறம்பாக, கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுங்கள்' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு கனிம வளத் துறை வருவாயை பெருக்க வேண்டும். சுரங்கங்கள் மற்றும் குவாரிகளிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்ய வேண்டும். விதிமீறல்களை ஆய்வு செய்து, அபராதம் விதிக்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு, விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கைப்பற்ற வேண்டும்.பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, எம் - சாண்ட், கிரஷர் அலகுகளைப் பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள் மூலம் திடீர் தணிக்கை மேற்கொண்டு, கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் பொறுப்பு செயலர் பணீந்திர ரெட்டி, கமிஷனர் சரவண வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.