நடிகர் விஜய் புதிய கட்சி துவக்கியுள்ளது, தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை பாதிக்குமா; மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கம் காட்டுவது சரியா; உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது நியாயமா என்பது உட்பட பல்வேறு விஷயங்களில், அரசுக்கு எதிராக கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக, மக்களின் நாடித்துடிப்பை அறியும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ரகசிய சர்வே நடத்தியுள்ளார். அதனடிப்படையில், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, உளவுத்துறை வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ரகசிய சர்வே நடத்தினார். அப்போது, கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, கட்சி, ஆட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எல்லாம் கருத்து கேட்கப்பட்டது.அந்த சர்வே முடிவில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதன்படியே, 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி வாகை சூடியது.முழு அதிகாரம்
ஆனாலும், இந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு, தமிழகம் முழுதும் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலை துாக்கின. சட்டம் - ஒழுங்கை சீர்படுத்த போலீஸ் அதிகாரிகளை மாற்றியதுடன், அவர்களுக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுதும் நிறைய ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படாததால், திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அதனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லுங்கள் என, பல தரப்பிலும் வந்த யோசனையை முதல்வர் ஸ்டாலின் ஏற்றார். அதன்படி, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க., களமிறங்கியது. இந்த நல்லுறவை உறுதிப்படுத்துவதன் அச்சாரமாக, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா அமைந்தது. விழாவில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மறைந்த கருணாநிதிக்கு பாராட்டு மழை பொழிந்தார். இது, மத்திய, மாநில அரசுகளை கடந்து, தி.மு.க., - பா.ஜ., இடையே மேலும் இணக்கத்தை ஏற்படுத்தியது. சித்தாந்த ரீதியில் இரு தரப்பும் எதிரெதிர் முனையில் நின்று அரசியல் செய்யும் போது, இதெல்லாம் நாகரிகமா என்று அரசியல்வாதிகள் சிலரே கேள்வி எழுப்பினர். கூட்டணி கட்சிகளில் இருந்தும் முணுமுணுப்பு கிளம்பியது.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு ரகசிய சர்வே எடுக்க விரும்பினார். தமிழக சட்டம் - ஒழுங்கு நிலைமை; பா.ஜ.,வுடன் தி.மு.க., இணக்கம் காட்டுவது பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்.மாற்றம் செய்வார்
அமைச்சராக உள்ள உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதை மக்கள் விரும்புகின்றனரா என்பது உட்பட பல கேள்விகள், மக்களின் நாடித்துடிப்பை அறியும் வகையில் சர்வேயில் கேட்கப்பட்டு உள்ளன.அத்துடன், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி துவக்கியுள்ள நடிகர் விஜய், வித்தியாசமான கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். அவரின் அரசியல் பிரவேசத்தால், தி.மு.க., ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படுமா என்றும் கேட்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் அளித்த பதில்கள் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதல்வர், 15 நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளார்.அதன்பின், சர்வேயில் கிடைத்த தகவல்களை மீண்டும் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்து, ஆட்சியிலும், கட்சியிலும் தேவையான மாற்றங்களை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
த/வெ.க.,வுக்கு 10 சதவீத ஓட்டு? ஸ்டாலின் நடத்திய சர்வேயில் கிடைத்த முடிவுகள் பற்றி, உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
1 தி.மு.க., அரசு மீது எதிர்க்கட்சியினர் கூறும் குறைகளை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை2 உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் தவறில்லை; அதாவது, முதல்வர் தான் விரும்பும் நபரை துணை முதல்வராக்கலாம் 3 சட்டம் - ஒழுங்கு, லஞ்சம், ஊழல் விஷயங்களில், முந்தைய ஆட்சிகளின் போது இருந்த நிலையே தற்போதும் தொடர்கிறது4 நடிகர் விஜய், தி.மு.க.,வையும், அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்து தான் அரசியல் செய்வார்; இருந்தாலும், அது தி.மு.க., ஓட்டு வங்கியை பெரிதாக பாதிக்காது; தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டுமே பிரியும்5 நடிகர் விஜய்க்கு, 10 சதவீத ஓட்டுக்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் தீவிரமாக களமிறங்கினால், 2 சதவீத ஓட்டுக்களை கூடுதலாக பெறலாம் 6 பா.ஜ., உடன் தி.மு.க., இணக்கமான போக்கை மேற்கொண்டால், தமிழக அரசுக்கு தாராளமாக நிதியை மத்திய அரசு வழங்கும்; தமிழக மக்கள் பயன்பெறுவர் என்பதால் இணக்கம் தேவையே. அதேநேரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைந்தால், அது இரு கட்சிகளையும் பாதிக்கும் இந்த விபரங்கள் தான் சர்வேயில் கிடைத்துள்ளன. அவற்றை முதல்வரிடம் அறிக்கையாக சமர்பித்துள்ளோம். அதனடிப்படையில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலருக்கும், தேவையான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.