உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன் விபத்தில் சிக்கிய 3.53 லட்சம் பேர் மீட்பு

108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன் விபத்தில் சிக்கிய 3.53 லட்சம் பேர் மீட்பு

சென்னை:தமிழகத்தில் கடந்தாண்டில் சாலை விபத்தில் சிக்கிய 3.53 லட்சம் பேர், '108' ஆம்புலன்ஸ் சேவையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில், இ.எம்.ஆர்.ஐ., - கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வாயிலாக, 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுதும் இயக்கப்படுகின்றன; 303 வாகனங்களில் உயிர் காக்கும் உயர் மருத்துவ வசதிகள் உள்ளன. இவை தவிர, மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல, 40க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 10,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரும் நிலையில், 7,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், கடந்தாண்டில் 18.35 லட்சம் பேர், ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்து உள்ளதாக, இ.எம்.ஆர்.ஐ., - கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, அந்நிறுவனத்தின் மாநில தலைவர் செல்வகுமார் கூறியதாவது:சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக, விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் போன்றவற்றில் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் சேவையால் கடந்தாண்டில் 18.35 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.சாலை விபத்தில் சிக்கிய 3.53 லட்சம் பேர்; பிரசவ கால சிகிச்சைக்கு 3.42 லட்சம் பேர்; இதய நோயாளிகள் 1.17 லட்சம் பேர்; நுரையீரல் பாதிப்பு 1.08 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதன் வாயிலாக, அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதிசெய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ