உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆமைகள் இறப்பிற்கு விசைப்படகுகள் காரணமா: மீனவர்களுடன் ஆலோசனை!

ஆமைகள் இறப்பிற்கு விசைப்படகுகள் காரணமா: மீனவர்களுடன் ஆலோசனை!

சென்னை: சென்னை கடலோரப் பகுதிகளில், சில நாட்களாக நுாற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மீன்வளத்துறை இணை இயக்குநர் ஷர்மிளா, மத்திய கடல் உணவு ஏற்றுமதி ஆணைய துணை இயக்குநர் ஜெயபால், கடலோர காவல்படை அதிகாரி இன்பராஜ், 'ட்ரி பவுண்டேஷன்' சுப்ரஜா மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'கடலுார், காரைக்கால், நாகை மாவட்டங்களில், அதிக விசைத்திறன் கொண்ட படகுகளை இயக்குவதால், ஆமைகள் இறப்பது குறித்து, ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள், அதிக விசைத்திறன் கொண்ட படகுகளை இயக்குவதில்லை' என, மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினர்.இதுகுறித்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் திருநாகேஸ்வரன் கூறியதாவது:சென்னையில், அழுகிய நிலையில், 10 நாள்களுக்கு முன் இறந்த ஆமைகள் கரை ஒதுங்கி வருகின்றன. மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடல் மாசு, பருவநிலை மாற்றம், கடல் நீரோட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் ஆகியவற்றால், ஆமைகள் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்ததும், சென்னையில் அதிகம் கரை ஒதுங்குவதும் தெரியவந்தது. மேலும் ஆய்வு நடந்து வருகிறது. கடல் ஆமைகள் தற்போது இனப்பெருக்கத்திற்காக மன்னார் வளைகுடாவில் இருந்து, வடசென்னை பகுதி வழியாக பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்கின்றன. ஆமைகள் இறப்பை தடுக்க, ரோந்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை