UPDATED : நவ 21, 2025 07:25 PM | ADDED : நவ 21, 2025 06:06 PM
சென்னை: கலவரத்தை தூண்டியதாக தவெகவின் ஆதவ் அர்ஜூனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ' சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்', எனக் கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்தப்பதிவை ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார். ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டியதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பிறப்பித்த உத்தரவில், ''ஆதவ் அர்ஜூனாவின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இல்லை. எந்த பிரிவினரையும் குறிவைத்து பதிவு செய்யப்படவில்லை. போராட்டங்களை பற்றி கூறுகிறதே தவிர, சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இல்லை. இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக்கூடும் என எச்சரிக்கும் வகையில் உள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.