டிரெக் தமிழ்நாடு திட்டம் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை:தமிழக அரசு அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 'டிரெக் தமிழ்நாடு' என்ற பெயரில், மலையேற்ற பயண திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி, விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.தமிழகத்தில், 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு மலையேற்றத்தை அனுமதிக்கும் போது, மனித நடமாட்டம் அதிகரிக்கும். இது, விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விலங்குகளின் இனப்பெருக்கம், உணவு தேடும் நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.மனிதர்களால் விலங்குகளுக்கு நோய் தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது. மலையேற்றத்துக்கு செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை வனப்பகுதியில் விட்டு விடலாம் என்பதால், வனம் மாசுபட வாய்ப்பும் உள்ளது. எனவே, வனப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.