உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

செனனை:மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது, சர்ச்சையாகி உள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014 முதல் 2016 வரை, இரண்டு கட்டங்களாக அகழாய்வு செய்து, சங்க கால நகர நாகரிகத்தை வெளிப்படுத்தியவர், மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். அங்கு, 110 ஏக்கரில் தொடர்ந்து அகழாய்வு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின், அகழாய்வு அதிகாரியாக பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி அகழாய்வை கைவிட்டார். இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், உயர் நீதிமன்றமும், தமிழக தொல்லியல் துறையும், அங்கு அகழாய்வு செய்ய உத்தரவிட்டன. அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கும், அகழாய்வை கைவிட்டதற்கும், தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை, மத்திய தொல்லியல் துறை அங்கீகரிக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்தது.இந்நிலையில், அவர் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்த, கீழடி அகழாய்வு அறிக்கைக்கு போதிய சான்றுகள் இல்லை என்றும், சான்றுகளுக்கு ஏற்ப காலத்தை மாற்றி, திருத்திய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. தான் வழங்கிய சான்றுகளே போதுமானவை என்பதால், அறிக்கையை திருத்த தேவையில்லை என, அமர்நாத் பதில் அளித்திருந்தார்; அது சர்ச்சையானது.இதை, தி.மு.க., - கம்யூ., கட்சியினர், பா.ஜ.,வின் தமிழர் விரோத போக்காக கட்டமைத்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன், மத்திய தொல்லியல் துறையின் டில்லி தலைமையகத்தில் வகித்து வந்த தொல்பொருள் பிரிவு இயக்குநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.நொய்டாவில் உள்ள தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் இயக்ககத்தின் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஆர்ப்பாட்டம்

கீழடி விவகாரம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணை கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை. கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி மதுரை விரகனுரில் இன்று தி.மு.க., மாணவரணி நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளாகக் கூடி, மத்திய அரசுக்கு தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்துவோம்; அவர்களைத் திருத்துவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thomas
ஜூன் 24, 2025 19:22

தமிழ்ப்பண்பாடு / நாகரீகத்துக்கு எதிர் நிலையை பாஜக அரசு கையாள்வது எதிர்பார்த்தது தான்.


முக்கிய வீடியோ