ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக் கட்டடம் இல்லாத நிலையில், எட்டு ஆண்டுகளாக, சமுதாயக் கூடத்தின் ஒரே அறையில், மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்; சத்துணவுக் கூடமும் இங்கேயே இயங்கி வருகிறது.நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கப்பத்தொரை, கக்கன்ஜி காலனி, மொட்டோரை ஆகிய கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 2003ம் ஆண்டு, கக்கன்ஜி காலனியில், ஊராட்சி துவக்கப் பள்ளி அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக, சமுதாயக் கூடத்தில் வகுப்புகளைத் துவக்கி, கிராமத்தின் அருகில் உள்ள மொட்டோரையில், பள்ளிக்கான வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டது.வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் நில அளவை மேற்கொண்டு, கட்டடம் கட்ட, நிலமும் சமன்படுத்தப்பட்டு, அடித்தளம் அமைக்க குழி தோண்டும் பணிகள் நடந்தன. அப்போது நடந்த ஆய்வில், 'குறிப்பிட்ட நிலம், கிராம மேய்ச்சல் நிலப் பிரிவில் வருவதால், பள்ளிக் கட்டடம் கட்டக் கூடாது' என தெரிவித்து, அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது எனக் கருதிய பள்ளி நிர்வாகம், சமுதாயக்கூட கட்டடத்திலேயே வகுப்புகளை நடத்தி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஒரே அறையில் நடக்கும் பள்ளியில், இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.கடந்த எட்டு ஆண்டுகளாக, ஒரே அறையில், 40 மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதே அறையில் தான், மாணவர்களுக்கான சத்துணவுக் கூடமும் இயங்கி வருகிறது. 'பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும்' என, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவை, கடந்த பல ஆண்டுகளாக முதல்வர், கல்வி அமைச்சர், கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் என, பலருக்கு மனு அளித்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.நமது சிறப்பு நிருபர்