| ADDED : டிச 03, 2025 02:49 PM
சென்னை: இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில், ஆலையின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான ரூ.2.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு, அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். ஸ்ரீசன் பார்மா' இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்த வழக்கில், ஆலையின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான ரூ.2.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதன்படி, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை பறிமுதல் செய்தததாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.