உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் கொள்முதல் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு தாமதம்

பால் கொள்முதல் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு தாமதம்

சென்னை:'ஆவின் பால் கொள்முதல் ஊக்கத்தொகையை உயர்த்தியதற்கு, அரசாணையை வெளியிடாதது ஏன்?' என, தமிழக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:பால் உற்பத்தியாளர்களுக்கு, 2023 டிசம்பர் 18ல், லிட்டருக்கு, 3 ரூபாய் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இது, ஊக்கத்தொகையே தவிர, ஆளும்கட்சியினர் கூறுவது போல கொள்முதல் விலை அல்ல.இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு எந்த நேரத்திலும் திரும்ப பெறப்படலாம் என்பதால், அதை கொள்முதல் விலை உயர்வாக அறிவிக்கவும்; ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.குறைந்த கொழுப்பு சத்து உடைய பாலுக்கு, முழுமையான ஊக்கத்தொகை வழங்குவது இல்லை. ஆவின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்பதை உணர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதமாகியும், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றாமல், ஊக்கத்தொகை அறிவிப்பு குறித்த அரசாணையை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேனுடன் சாலை மறியல்

பெரம்பலுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 510 உறுப்பினர்கள், 1 லிட்டர் பால், 33 ரூபாய்க்கு கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தபடி, 3 ரூபாய் பால் ஊக்கத் தொகை உயர்வு வழங்கப்படவில்லை.ஒன்பது மாதங்களுக்கு முன், தமிழக அரசு அறிவித்த பால் கொள்முதல் விலையையும் இதுவரை உயர்த்தாமல் உள்ளனர். இதனால், அரசு அறிவித்த கொள்முதல் விலையான, 38 ரூபாயை வழங்க வேண்டும் என, பெரம்பலுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் ஊற்றுபவர்கள் கேனுடன் நேற்று காலை பெரம்பலுாரில் மறியலில் ஈடுபட்டனர்.ஆவின் ஏரியா மேலாளர் அன்பழகன், செயல் அலுவலர் இளங்கோவன் பேச்சு நடத்தினர். இதனால், பெரம்பலுார் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்