மதுரை : ''தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும். பொறுத்திருந்து பாருங்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தேர்தல் அறிவித்த பிறகுதான் எங்கள் தலைமையில் கூட்டணி அமைவது குறித்து முடிவாகும். தி.மு.க., கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியிலிருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. மாநிலத்திற்கு எதிரான பிரச்னைகள் வரும் போது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான் அ.தி.மு.க., சுயமாக முடிவெடுத்து இப்போது தேர்தலை சந்திக்கிறது.தேர்தல் 'சீட்' அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. தி.மு.க.,வில் தலைமை பதவிக்கு கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இருப்பதுதான் வாரிசு அரசியல். தி.மு.க., ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் நிறுவனம். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின்னர் எப்படி முடக்க முடியும். பன்னீர்செல்வம் ஆசை நிராசையாக தான் முடியும்.நடிகை திரிஷா குறித்து விமர்சித்த ஏ.வி.ராஜூ கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்ற அவதுாறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள். மேகதாது விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க., அரசு. தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது.இவ்வாறு கூறினார்.
தி.மு.க., கூட்டணியில் பிளவா
கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை அ.தி.மு.க., கைவிட்ட நிலையில் பலமான கூட்டணி அமைக்க பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர த.மா.கா., விரும்புகிறது. கூட்டணி அமைக்க தே.மு.தி.க., காத்துக்கொண்டிருக்கிறது. பா.ம.க., முயற்சித்து வருகிறது. இக்கட்சிகள் தவிர சிறிய கட்சிகள்தான் அ.தி.மு.க., பக்கம் உள்ளன. இதனால் ஓட்டு சதவீதமும், வெற்றி வாய்ப்பும் குறையும் எனக்கருதி த.மா.கா., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் 'சீட்' ஒதுக்கீட்டில் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் சில கட்சிகள் அ.தி.மு.க., பக்கம் வர வாய்ப்புள்ளது.இதை கருத்திற்கொண்டே 'தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும். பொறுத்திருந்து பாருங்கள்' என பழனிசாமி தெரிவித்ததாக அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.