தீ விபத்தின் பாதிப்பை அறிய தீயணைப்புத்துறையில் ட்ரோன்
மதுரை : தமிழகத்தில் தீ விபத்தின்போது அதன் பாதிப்பை உடனடியாக 'ட்ரோன்கள்' மூலம் கண்டறிந்து தீயை அணைக்க தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு 'ட்ரோன்' வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் தீயணைப்பு, மீட்பு பணிக்கான கருவிகளே இத்துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீட்பு பணிகளில் மோப்ப நாய் பயன்படுத்தும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதற்கிடையே அதிக வெடிவிபத்து நடக்கும் சிவகாசி பகுதிகளில் பட்டாசு ஆலை கட்டடங்கள் வெடித்து சிதறும்போது, பாதுகாப்பு கருதி வீரர்கள் உடனடியாக சென்று மீட்புபணியில் ஈடுபட முடிவதில்லை. உடல்களை தேடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 'ட்ரோன்களை' பயன்படுத்த தீயணைப்புத்துறை முடிவு செய்துள்ளது. தீ விபத்து அல்லது கட்டட இடிபாடுகளின்போது ட்ரோன்களை பயன்படுத்தி பாதிப்பின் அளவை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் துரிதமாக செயல்பட முடியும். மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்படாது. முதலில் வாங்கப்படும் 'ட்ரோன்' அடிக்கடி வெடிவிபத்து நடக்கும் சிவகாசி பகுதியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஸ்டேஷன்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.