மூணாறு: மறையூரில் சந்தன மரக்கடத்தலுக்கு பலிகடாவான தமிழர்கள் பின்வாங்கியதால் கடத்தல் குறைந்து வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் கடைகோடியில் தமிழக எல்லையோரம் மறையூர், காந்தலூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. அவ்வூராட்சிகளில் 119 சதுர கி.மீ., சுற்றளவில் சந்தன மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் 2 லட்சம் சந்தன மரங்கள் இருந்தன. அவை வெட்டி கடத்தப்பட்டதால் தற்போது அதன் எண்ணிக்கை 60 ஆயிரமாக குறைந்துள்ளது. 2005 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 சந்தன மரங்கள் வரை வெட்டி கடத்தப்பட்டன.
கடத்தல்
மறையூரில் இருந்து உடுமலை பேட்டை, கொடைக்கானல், வால்பாறை, பழநி ஆகிய தமிழக பகுதிகளுக்கும், மூணாறு அருகில் உள்ள வட்ட வடை, மாங்குளம் உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கும் வனங்கள் வழியாக தலை சுமையாக சந்தன கட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதிகளில் இருந்து வாகனங்களில் கடத்தப்பட்டன. அதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டனர். பலிகடா
தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடத்தலில் அதிகளவில் ஈடுபட்டனர். அப்பகுதிகளைச் சேர்ந்த அப்பாவிகளை தேர்வு செய்து மரம் வெட்டுவதற்கு என அழைத்து வந்து கடத்தலில் ஈடுப்படுத்தினர். ஒரு நபர் 25 கிலோ வரை சந்தன கட்டைகளை தலை சுமையாக கடத்த ரூ.5 ஆயிரம் வரை கூலி வழங்கப்பட்டது. ஆனால் சிக்கியபின் ஏற்பாடு செய்தவர்கள் விலகிக்கொள்ள அப்பாவிகளே வழக்குகளை சந்திக்க வேண்டி வந்தது. கிடைத்த கூலி முழுதும் வழக்கு, விசாரணை என போனதால் அதன்பின் மரம் வெட்ட, கடத்தலுக்கு செல்ல யாரும் முன்வரவில்லை. 2000 முதல் 2015 வரை கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் மீது தற்போதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.வனத்துறையினரின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையாலும், தமிழக கடத்தல்காரர்கள் உண்மை நிலை உணர்ந்து பின்வாங்கியதாலும் கடத்தல் வெகுவாக குறைந்தது.இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த சந்தன மரங்கள், கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள் மறையூரில் உள்ள டெப்போவில் பாதுகாக்கப்படுகிறது. அவற்றை செதுக்கி தரம் பிரித்து ஆண்டு தோறும் பொது ஏலம் விடப்படுகிறது. தற்போது 'ஆன் லைன்' வாயிலாக ஏலம் நடக்கிறது.இதனால் வனத்துறையினர் மட்டுமின்றி மலைப்பகுதி மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.