உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை பொய்த்ததால் ஆடு வளர்ப்போர் திண்டாட்டம்

மழை பொய்த்ததால் ஆடு வளர்ப்போர் திண்டாட்டம்

ராமநாதபுரம் : மழை பொய்த்ததால், ஆடு வளர்ப்போர் தொழிலை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை நம்பி தான் விவசாயம் உள்ளது. தற்போது மழை பொய்த்து, கொளுத்தும் வெயிலால், விளை நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. வறண்ட நிலங்களில் மிஞ்சி இருக்கும் காய்ந்த புற்கள் தான் கால்நடைகளுக்கு தீவனமாகின்றன. இங்கு வளர்க்கப்படும் ஆடுகள் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருப்புத்தூர், பரமக்குடி, மதுரை வரை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

ஆடுவளர்ப்பில் ஈடுபட்டுள்ள இருளப்பன் கூறியதாவது: ஆடு வளர்ப்பு தொழில் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், இந்த தொழிலை விட்டு போக முடியாத நிலையில் உள்ளோம். காலை 8 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்து, இரவு 8 மணிக்குத்தான் வீட்டுக்கு செல்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆடுகளை விற்பனைக்கு கொடுப்போம். விலையை பொறுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படும். ஆட்டுக்கு 'அம்மா, கானா, படுசாவு' போன்ற நோய்கள் வந்தால், அவற்றை பராமரிக்கவே பெரும் தொகை செலவாகிறது. மழை பெய்யாததால், இரையில்லாமல் ஆடுகளை வளர்க்க முடியாமல் திண்டாடி வருகிறோம். இதே நிலை தொடர்ந்தால், வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியது தான். இலவச ஆடு கொடுக்க முன்வரும் அரசு, ஆடு வளர்ப்போருக்கு ஏதாவது நலத்திட்டங்கள் செயல்படுத்தினால், நன்றாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி