சென்னை: 'தமிழக கவர்னர் ரவி, எதிர்க்கட்சிகளின் தலைவராக செயல்பட்டு வருகிறார்' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை:கவர்னருக்கு, அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை இல்லை. குடியரசு தினத்தன்று கூட, நல்ல வார்த்தை சொல்லவும் மனம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விமர்சிக்க, குடியரசு தினத்தை கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது.சட்டசபையில் கவர்னர் செயல்பாடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, தேநீர் விருந்து புறக்கணிப்பு என, தனக்கு எதிரான செய்திகள் வந்து கொண்டிருப்பதால், கவர்னர் ரவி துாக்கத்தை தொலைத்துள்ளார். அதைப்போக்க, தி.மு.க., அரசு மீது அவதுாறாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.நிடி ஆயோக் அமைப்பு, கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில், 17 இலக்குகளில் தமிழகம் பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றுள்ளது. ஒட்டு மொத்த மாநிலங்கள் அளவில், தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.'தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது' என, மூன்று நாட்களுக்கு முன் கவர்னர் சொன்னார். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர், தங்கள் மகள்களை தமிழகத்திற்கு படிக்க அனுப்பும் போது, பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றும் பேசினார். இன்றைக்கு போதை பொருள் புழக்கம், தீவிரவாத அச்சுறுத்தல் என்று புரண்டு பேசுகிறார். இப்படியெல்லாம் சொல்வதற்கு, கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழக வளர்ச்சியை சீரழிக்க நினைப்போருக்கு துணை போக துடிக்கிறார். சட்டசபையை துளியும் மதிக்காத கவர்னர், சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு, அரசை முடக்க நினைக்கிறார். தமிழகத்தை மோசமான மாநிலமாக சித்தரித்து, தமிழர்களை தேச விரோதிகள் போல பேசி வருவது, கவர்னருக்கு அழகல்ல.'கவர்னரை மாற்றி விடாதீர்கள், அவர் தான் தி.மு.க.,வின் பிரசார பீரங்கி' என, முதல்வர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அந்த ஆத்திரம் தான், அறிக்கையில் நிரம்பி வழிகிறது. கவர்னர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அது, தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் சாதகமாகவே அமையும்.போதை பொருள் தடுப்பில், 2023ல் மட்டும், 10,256 வழக்குகள் பதியப்பட்டு, 14,770 பேர் கைது செய்யப்பட்டனர். பாகுபாடான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறைகள், பல்வேறு முட்டுக்கட்டைகளால், தமிழக வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு செயல்படுகிறது. அதற்கு கவர்னர் ஒரு கருவி.அரசை எதிர்த்து பேச எந்தவொரு விவகாரமும் இல்லை. வரும், 2026 தேர்தலிலும், தி.மு.க.,வே, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எழுச்சி உள்ளது. இதையெல்லாம் கேட்டு கவர்னர் ரவி, விக்கித்து போயிருப்பார். அரசியல் செய்ய ஆசை இருந்தால், அப்பதவியில் இருந்து விலகி, எங்களோடு நேருக்கு நேர் அரசியல் களத்திற்கு வரட்டும். அரசியல்வாதியாக எங்களுக்கு பதில் சொல்லட்டும்.இவ்வாறு மதிவேந்தன் கூறியுள்ளார்.