உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பூமிதான இயக்க நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

 பூமிதான இயக்க நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் பூமிதான இயக்க நிலங்களுக்கு, பதிவுத்துறை இணையதளத்தில் வழிகாட்டி மதிப்புகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1958ல் பூமிதான இயக்கம் துவக்கப்பட்டது. இதன் வாயிலாக, பல்வேறு கிராமங்களில், மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், பொதுமக்கள் விட்டு கொடுத்த நிலங்கள், பூமிதான இயக்கத்திடம் கொடுக்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட நிலங்களை முறைப்படுத்தி, ஏழை மக்கள் விவசாயம் செய்ய, வீடு கட்டி வசிக்க, அரசின் பொது திட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கவனக்குறைவு

பூமிதான இயக்கம் வாயிலாக, 28,050 ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டன. இந்த நிலங்கள் தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. வருவாய் துறையினரின் கவனக்குறைவால், இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முந்தைய தலைமுறையினர் விட்டுக் கொடுத்த நிலத்தை, அவர்களின் அடுத்த தலைமுறையினர் ஆக்கிரமித்து பயன்படுத்துவது போன்ற புகார்கள் வருகின்றன. இத்தகைய நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், பல இடங்களில் அதை வெளியாருக்கு விற்பதும் நடக்கிறது. விபரம் தெரியாமல், இந்நிலங்களை வாங்கியவர்கள், பட்டா மாறுதலுக்கு செல்லும் போது தான் உண்மை நிலவரத்தை அறிகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பூமிதான இயக்க நிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், பூமிதான இயக்க வாரிய நிலங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில், பெறப்பட்ட நிலங்களைக் கண்டறிந்து, தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாய பயன்பாட்டுக்காக, 122 பேருக்கு, 81 ஏக்கர், வீடு கட்டி வசிக்க, 1,342 பேருக்கு, 52 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன.

கடிதம்

அரசின் பல்வேறு துறைகளின் பொது திட்டங்களுக்காக, 206 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, அவற்றுக்கான நில வழிகாட்டி மதிப்புகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பதிவுத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு, பூமிதான இயக்க நிலங்களின் வழிகாட்டி மதிப்பை பூஜ்யமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வழிகாட்டி மதிப்புகள் நீக்கப்படுவதால், இந்த நிலங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பூமிதான இயக்கம் என்றால் என்ன?

நாடு சுதந்திரம் பெற்ற பின், நில உடைமையில் காணப்பட்ட சமத்துவமின்மையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. காந்தியடிகளின் சர்வோதய கொள்கை அடிப்படையில், ஸ்ரீ ஆச்சார்ய வினோபா பாவே, 1951ல், 'பூதான்' எனப்படும் பூமிதான இயக்கத்தை துவக்கினார். அதிக அளவு நிலம் வைத்திருப்போர், தங்களுக்கு வேண்டியது போக உபரி நிலத்தை, ஏழை மக்களுக்கு தானமாக வழங்குவதே இதன் அடிப்படை இலக்காக இருந்தது. தமிழகத்தில், இந்த இயக்கம், 1956 வரை மேற்கொள்ளப்பட்டதில், ஏராளமானோர் உபரி நிலங்களை ஒப்படைத்தனர். தன்னார்வ இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தை, ஒரு கட்டத்தில் அரசு தலையிட்டு வாரியமாக மாற்றியது. இதில் திரட்டப்பட்ட நிலங்களை, ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை முறைப்படுத்த, அரசின் பங்கேற்பு அவசியமானது. இதற்காக, தமிழகத்தில், 1958ல் 'பூமிதான யக்ஞ சட்டம்' நிறைவேற்றப் பட்டது. இதன் அடிப்படையில் வருவாய் துறையின் ஒரு பகுதியாக, பூமிதான இயக்கம் ஒரு வாரியமாக செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை