முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:'முழுமையான விசாரணைக்கு பின்னரே, ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை, குறித்த காலத்திற்குள் முடிக்க, மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி, பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க, அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடினர் ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதில், அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, போதுமான எண்ணிக்கையில், மாநில அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள், விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். மேலும், முழுமையான விசாரணைக்கு பின்னரே, ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக, ஆறு வாரங்களில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.