| ADDED : ஜன 19, 2024 11:52 PM
மதுரை:'பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா, பாதுகாவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி இடவசதியை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் குமாரபுரம் பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனு:டிராக்டர் மற்றும் டிரெயிலரில் அனுமதியின்றி கற்களை எடுத்து சென்றதாக, 2013ல் கனிமவள உதவி இயக்குனர் பறிமுதல் செய்தார். அவற்றை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: பறிமுதல் செய்த அந்த வாகனங்கள் கோவில்பட்டி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன; வாகனத்தை காணவில்லை. வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கு முடிக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர் துாய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. அவருக்கு எந்த நிவாரணமும் வழங்க விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.எனினும், பிரச்னையை அப்படியே விட்டு விட முடியாது. பறிமுதல் செய்த வாகனம் தாலுகா அலுவலக பாதுகாப்பில் இருந்தது. அது காணாமல் போனது கூட தெரியாமல் அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.அரசு அலுவலகத்திலிருந்து எதிர்காலத்தில் வாகனங்கள் காணாமல் போகாமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வாகனம் காணாமல் போனது வெட்கக்கேடானது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா, பாதுகாவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி இடவசதியை ஏற்படுத்த வேண்டும்.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, தமிழக அரசின் உள்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.