உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில்,'ஏற்கனவே அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். கோயிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கோயில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோயிலைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி