செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் இந்தியா இனி புதிய வரலாறு படைக்கும்; கட்டுப்பாடு நீக்கத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
திருப்பூர்: ''மூலப்பொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், இந்தியா புதிய வரலாறு படைக்கும்,' என, ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்தியாவில், செயற்கை நுாலிழை உற்பத்தியை துவக்கும் முயற்சி பரவலாக நடந்தாலும், அதற்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு அனுமதி கிடையாது. மாறாக, துணியை இறக்குமதி செய்து, ஆடை உற்பத்தியை தொடர வேண்டிய நிலை இருந்தது. கடந்த 6ம் தேதி, திருப்பூர் வந்திருந்த, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குநர் வினம்ரா மிஸ்ராவிடம், 'ஜவுளித்துறைக்கு எதிர்மறையாக உள்ள தரக்கட்டுப்பாடு ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழ், 'தொழில்' பக்கத்தில், கடந்த, 10ம் தேதி செய்தி வெளியானது. இதற்கிடையில், 'செயற்கை நுாலிழை உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு,கட்டுப்பாடுகளை தளர்த்தி, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதனால்,செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதால், தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''மூலப்பொருள் இறக்குமதிக்கான தடைநீக்கப்பட்டுள்ளதால், ஜவுளித்துறையினர், செயற்கை நுாலிழை உற்பத்தியில் கால்பதிக்க முடியும்.செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரித்தால், சர்வதேச சந்தையில் சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டியை சமாளிக்க முடியும். எனவே, இந்தியா, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும்,'' என்றார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில், 60 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகள் பங்கு வகிக்கின்றன. மூலப்பொருள் எளிதாக கிடைத்தால், துணி இறக்குமதிக்கு பதிலாக,செயற்கை நுாலிழை மற்றும் துணி உற்பத்தி செய்வது எளிதாகும்; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வேகமெடுக்கும்,'' என்றார்.
தமிழக அமைச்சர் வரவேற்பு
'பாலியெஸ்டர் நுால் மீதான தரக் கட்டுப்பாட்டு உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது, தமிழக ஜவுளி துறைக்கு பெரிதும் உதவும்' என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பாலியெஸ்டர் நுால் மீதான தரக் கட்டுப்பாட்டு உத்தரவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதை, ஓராண்டிற்கு மேலாக தமிழகம் கேட்டு வந்தது. உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய ஆலைகளை அனுமதிப்பதன் வாயிலாக, ஜவுளி மற்றும் ஆடை துறையின் போட்டி செலவை ஓரளவு மீண்டும் பெற உதவும். இது, நெகிழ்வு தன்மை மற்றும் விலை உணர்திறன் ஏற்றுமதி சந்தைகளை சார்ந்துள்ள, ஒவ்வொரு தொழில் குழுமங்களுக்கும் முக்கியமானது. சில தினங்களுக்கு முன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் உடனான சந்திப்பின் போது, ஜவுளி துறைக்கு நிவாரணம் வழங்குமாறு கேட்டு கொண்டேன். அவர், சாதகமான பதில் அளித்தார். கடினமான காலத்தில், மத்திய அரசின் முடிவால், ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.