உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வராத வாகனத்துக்கு தவணை வசூல்; ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வராத வாகனத்துக்கு தவணை வசூல்; ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர்; திருப்பூரில், சரக்கு வாகனம் புக்கிங் செய்த வாடிக்கையாளருக்கு வாகனம் டெலிவரி செய்யாமலே கடன் தவணை வசூல் செய்யப்பட்டது. இதனால், வாகன டீலர் மற்றும் நிதி நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம் விதித்தது. திருப்பூர், தட்டான் தோட்டத்தைச் சேர்ந்தவர் காந்தி, 43. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி. வியாபார பயன்பாட்டுக்காக சொந்தமாக சரக்கு வாகனம் வாங்குவதற்காக, பல்லடம் ரோட்டில் உள்ள அம்மன் ஆட்டோ நிறுவனத்தை அணுகி, வாகனம் வாங்குவதற்கு, 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினார். இதற்காக, திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 8.60 லட்சம் ரூபாய் வாகன கடன் வாங்க விண்ணப்பித்தார். இதற்கு மாத தவணையாக 19,580 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2023 ஏப்., மாதம் வாகனத்துக்கான முதல் மாத தவணைத் தொகையை அவர் செலுத்தினார். ஆனால் அவருக்கு வாகனம் டெலிவரி செய்யப்படவில்லை. நிதி நிறுவனத்தினர் காந்தியை தொடர்பு கொண்டு, தவணைத் தொகையை தொடர்ந்து செலுத்துமாறு கூறி, வாகனம் டெலிவரி செய்து விடுவர் என்று கூறியுள்ளனர். பல தவணையாக மொத்தம் 1.60 லட்சம் ரூபாய் தவணை தொகை செலுத்தியுள்ளார். ஆனால் பல மாதமாகியும் வாகனம் வரவில்லை. இது குறித்து, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், காந்தி, தனது வக்கீல் பிரான்சிஸ் அலெக்சாண்டர் வாயிலாக வழக்கு தொடுத்தார். வழக்கில் நுகர்வோர் கோர்ட் நீதிபதி தீபா மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர், 'வாகனத்துக்கான பணத்தை பெற்றுக் கொண்டு வாகனத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்த டீலர் மற்றும் நிதி நிறுவனம் காந்தியிடம் வசூலித்த, 1.69 லட்சத்தை வட்டியுடன் திரும்ப தர வேண்டும். இரு நிறுவனமும் சேர்ந்து, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவு, 10 ஆயிரம் ரூபாய் ஆகியன வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை