உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனக்கு தெரியாமல் கட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி?

தனக்கு தெரியாமல் கட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி?

துாத்துக்குடி:தமிழக துணை முதல்வர் உதயநிதி நேற்று துாத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தி.மு.க., சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்த அவர், தேர்தல் பணியை துவக்கி வேகமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக செயல்பட வேண்டும் எனவரும் அவர் நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.தொடர்ந்து, துாத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு மனு அளிக்க வந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 7,893 பேருக்கு 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார்.தொடர்ந்து, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் மாவட்டத்தில் நடந்து வரும் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் நடந்த பணிகளின் நிலை குறித்தும், முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையாதது குறித்து, அவர் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டார். பகல் 12:00 மணியளவில் துவங்கிய கூட்டம், மதியம் 2.30 மணி வரை நடந்தது.துாத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ, க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆனால், துாத்துக்குடி லோக்சபா எம்.பி.,யான கனிமொழி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர், ஆப்சென்ட் ஆனதால் உதயநிதி 'அப்செட்' ஆனதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். இதனால், தி.மு.க., சார்பில் பவள விழாவை முன்னிட்டு நடக்க இருந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டார்.உதயநிதி வருகை குறித்து முறையான தகவல் இல்லாதது மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முறையான அழைப்பு இல்லாது போன்றவற்றால் கனிமொழி திடுமென புறப்பட்டு வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து உதயநிதி கூறியதாவது:துாத்துக்குடி வரும்போது கனிமொழியிடம் தகவல் தெரிவித்து விட்டு தான் வந்தேன். அவசர வேலையாக அவர் வெளிநாடு சென்றுள்ளார். 15 நாட்களில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார். அவர் தமிழகம் திரும்பியதும், அவருடன் இணைந்து மீண்டும் இங்கு வருவேன். அப்போது, இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்போம். உள்ளாட்சி தேர்தல் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. முதல்வர்தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி சிங்கப்பூர் பயணம் ஏன்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்படும். இந்த குழுவிற்கு லோக்சபா எம்.பி., தலைவராக செயல்படுவார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன், துாத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உதயநிதி வருகையால் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், உதயநிதி வருகை தொடர்பான தகவல் கனிமொழி எம்.பி.,க்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கட்சியின் துணை பொதுச் செயலரான தனக்கு தகவல் தெரிவிக்காமல் கட்சியின் பவளவிழாவையொட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலரான அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு செய்தது, கனிமொழி எம்.பி.,க்கு பிடிக்கவில்லை. இதனாலேயே, அவசர வேலை இருப்பதாகக் கூறி, திடுமென அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார். இதுவே, ஆய்வுக் கூட்டத்தை கனிமொழி புறக்கணிக்க காரணம் என தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி