உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுகளை சந்தை பொருட்களாக மாற்ற இணையவழி பரிமாற்ற மையம் துவக்கம்

கழிவுகளை சந்தை பொருட்களாக மாற்ற இணையவழி பரிமாற்ற மையம் துவக்கம்

சென்னை, : கழிவுகளை, மதிப்புமிக்க சந்தை பொருட்களாக மாற்ற, இணையவழி பரிமாற்ற மையம் துவங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: நிலைத்த, சூழல்சார் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில், முன்னணி தொழில் துறை மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. ஆனாலும், விரைவான தொழில் துறை விரிவாக்கத்தால், சாம்பல், மின்னணு கழிவுகள் மற்றும் பல தவிர்க்க முடியாத கழிவுகள் உருவாகின்றன. புதிய முயற்சி இத்தகைய கழிவுப் பொருட்களை மதிப்புமிக்க வளங்களாகக் கருதி, உயர் மதிப்புள்ள சந்தைப் பொருட்களாக மாற்றும்போது, அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும்; சுழற்சி பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இதற்காக, தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இணையவழி கழிவு பரிமாற்ற மையம் என்ற புதிய முயற்சியை துவங்கிஉள்ளது. கழிவு உருவாக்குபவர்கள், சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்கள், பிற கழிவு பயன்பாட்டாளர்களை இணைக்கும் பாலமாக, இந்த இணையவழி கழிவு பரிமாற்ற மையம் செயல்படுகிறது. இதனால், கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்ற வழிவகை செய்வதுடன், கழிவு பரிமாற்றத்தையும் எளிதாக்க முடியும். இந்த இணையவழி மையம், கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை, அதன் வகை, அளவு, இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட வழி செய்கிறது. பொருளாதார வளர்ச்சி அவர்களை பொருத்தமான மறுசுழற்சி நிறுவனங்கள் மற்றும் பிற பயனாளர்களுடன் இணைக்க உதவுகிறது. இதன் வாயிலாக, சூழல்சார் கழிவு மேலாண்மை திறம்பட செயல்படுவதுடன், மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. பலர், ஏற்கனவே இந்த இணையவழி கழிவு பரிமாற்ற தளத்தில் பதிவு செய்துள்ளனர். tnpcb.gov.in/OWEMS என்ற தளத்தில், உடனே பதிவு செய்து பயன் பெறுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை