ஐகோர்ட் மத்தியஸ்த மையத்தில் வழக்கு கட்டணத்தை குறையுங்கள் தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்
சென்னை:'சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மத்தியஸ்த மையத்தில், வழக்கு தொடர்வோருக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், செயலர் கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன் ஆகியோர், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் அளித்த கடிதம்: மாற்றும் முறை
பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சமரச பேச்சு நடத்துவதற்காக, உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது. மாற்றுமுறை தீர்வாக செயல்படுத்தப்படும் மத்தியஸ்தம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் குழு செயல்பட்டு வருகிறது.இந்த குழுவில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, சர்வதேச மத்தியஸ்த மையம் அமைத்தல், உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கிறது. ஆனால், இக்குழுவின் கூட்டம் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது. மேலும், மத்தியஸ்தம் செய்வதற்கான நீதிமன்ற கட்டணம், டில்லி, கொல்கட்டா, மும்பை உயர் நீதிமன்றங்களை விட, பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல், மற்ற உயர் நீதிமன்றங்களை நாட துவங்கியுள்ளனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மறு ஆய்வு
எனவே, உயர் நீதிமன்ற கட்டண விதிக்குழு, மத்தியஸ்தம் தொடர்பான நீதிமன்ற கட்டணத்தை மறு ஆய்வு செய்து, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் சர்வதேச மத்தியஸ்த மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.