தமிழகத்தை நெருங்குது காற்றழுத்த தாழ்வு பகுதி 27 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை
சென்னை:தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்குவதால், இன்று, 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வானிலை ஆய்வு மைய அறிக்கை:தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது. இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும்.தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும். இன்று கனமழை
அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யலாம். சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில், பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.