திருநெல்வேலி:ஆணவ கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதி, பரோலில் வந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி, தச்சநல்லுாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன், 58; தலையாரி. இவரது மனைவி செல்லம்மாள். இவர்கள் மகள் காவேரி, 2016ல் வண்ணார்பேட்டை, இளங்கோ நகரைச் சேர்ந்த விஸ்வநாதன், 25, என்பவரை காதலித்தார். அவர் ரயில்வே ஊழியர். 2010 மே 3ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். சங்கரநாராயணன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். மகள் பட்டியலின வாலிபரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமுற்றார். விஸ்வநாதனின் பெற்றோர் வீடு வண்ணார்பேட்டை, இளங்கோநகரில் உள்ளது. 2016 மே 13ல் சங்கரநாராயணனும், செல்லம்மாளும் அங்கு சென்றனர். அங்கு விஸ்வநாதனின் அக்கா கல்பனா, 28, அவரது குழந்தை மட்டும் இருந்தனர். கர்ப்பிணியான அவரிடம், சங்கரநாராயணன், 'காவேரி எங்கே?' என கேட்டு தகராறு செய்தார். ஆத்திரத்தில் அரிவாளால், அவரது குழந்தை கண் எதிரே கல்பனாவை வெட்டிக் கொலை செய்தார். இந்த ஆணவ கொலையில் சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல்காதர், 2017 ஜன., 10ல் துாக்குத்தண்டனை விதித்தார். சங்கரநாராயணன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக திருநெல்வேலி சிறையில் இருந்த சங்கரநாராயணன், கடந்த மாதம் பரோலில் வீட்டுக்கு வந்தார். தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் காலை, மாலை கையெழுத்திட்டார். ஜூலை 21ல் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில், கடந்த, 19ம் தேதி பாலபாக்யாநகர் பகுதியில், திருநெல்வேலியில் இருந்து திருச்சி சென்ற ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். தலை மற்றும் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.