| ADDED : பிப் 25, 2024 02:12 AM
சென்னை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள், 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் சிறப்பு கடன் வழங்குகிறது.அதன்படி, ஒரு நிறுவனத்திற்கு, 6 சதவீத வட்டியில் அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதை திரும்ப செலுத்தவும் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜனவரி துவக்கத்தில் கடன் வழங்கும் பணி துவங்கியது. இதற்கு அம்மாதம், 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், இம்மாதம், 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.இதுவரை, 2,000 நிறுவனங்களுக்கு, 52 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அவகாசம் முடிவடைந்த நிலையிலும், கடன் வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.