சென்னை:“கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாசுபட்ட நீர்நிலைகள், அசுத்தமான நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்,” என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, 'நிக்லேரியா பவுலேரி' என்ற அமீபா நுண்ணுயிரி, சுவாசப்பாதை வழியே ஊடுருவி, அரிதான மூளை காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது. சவால் தீவிர காய்ச்சல், அடங்காத தலைவலி என ஆரம்பித்து, கழுத்து பகுதி இறுக்கம், குமட்டல், வாந்தி, தலைசுற்றல், வலிப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அமீபா, நரம்புகளின் நியூரான்களை தின்று உயிர் வாழும் என்பதால், மூளையையும் சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால், பேதலிப்பு நிலை, மூர்ச்சை நிலை ஏற்பட்டு, கோமா மற்றும் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும், நோய் பாதித்த ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். மூளை அயற்சியை ஏற்படுத்தி, உயிரை கொல்லும் அமீபா நோய் பாதிப்பு, கேரள மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில், இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொற்றுநோய் இல்லை என்றாலும், நீர்நிலைகள் வாயிலாக தமிழக மக்களையும் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பராமரிப்பு இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: கொரோனா போன்று அச்சப்பட வேண்டாம். ஆனாலும், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாசடைந்த குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. தெரு நாய்கள் பராமரிப்புக்காக, தமிழகத்தில் குடில்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சரியான நேரத்தில் சிகிச்சை அவசியம்
சிவகங்கை அரசு மருத்துவமனை பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: அமீபா, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு கட்டுப்படாது. இதற்கான பிரத்யேக மருந்தாக, 'ஆம்போடெரிசின் - பி' இருக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் கணித்து, சிகிச்சை வழங்கினால் குணப்படுத்த முடியும். தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட, 47 வயது நபர், சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு, தனியார் மருத்துவ மனையில் குணப்படுத்தப்பட்டார். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், 100 சதவீதம் உயிர் பிழைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த நோய், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால், அச்சப்பட வேண்டாம். எச்சரிக்கையும், விழிப்புணர்வும் தான் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.