உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கை போனாலும் கவலை இல்லை; தி.மு.க.,வின் கூட்டணி வியூகம் மாறுகிறதா?

 கை போனாலும் கவலை இல்லை; தி.மு.க.,வின் கூட்டணி வியூகம் மாறுகிறதா?

'அதிக தொகுதி தராவிட்டால் வெளியேறுவோம் என கூட்டணி கட்சிகள் மிரட்டினால் கண்டுகொள்ள வேண்டாம்; அவை வெளியேறினால், நமக்கு நல்லதுதான்' என, தி.மு.க., தலைமைக்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி உள்ளதாக தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும், ஆட்சி அதிகாரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., பங்கு கொடுக்கவில்லை.

விஜய் அளித்த 'ஆபர்'

இந்நிலையில், புதிதாக த.வெ.க., கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என, 'ஆபர்' அளித்துள்ளார். இந்த அறிவிப்பு, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆசையை துாண்டி விட்டுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம், 'தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும்' என்ற எண்ணத்தை ஆழமாக வேரூன்ற செய்துள்ளது. துவக்கத்தில் ஆட்சியில் பங்கு கோஷத்தை உயர்த்திப் பிடித்த வி.சி., தலைவர் திருமாவளவன், திடுமென அந்த கோஷத்தை கீழே போட்டு விட்டார். வரும் தேர்தலுக்கு அந்த கோஷம் இருக்காது என கூறியுள்ளார். ஆனால், ஆட்சியில் பங்கு கோஷத்தை உயர்த்திப் பிடிக்குமாறு தமிழக காங்., தலைவர்களும், நிர்வாகிகளும் கட்சி மேலிட தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பொதுவெளியிலும் அது பற்றி பேசி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். 'தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்க வேண்டும்; தர மறுத்தால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என, கட்சி கூட்டங்களில் குரல் எழுப்புகின்றனர். இந்நிலையில், பீஹார் தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, காங்.,கின் கூடுதல் சீட் கேட்கும் முயற்சி மற்றும் ஆட்சியில் பங்கு கோஷம் என இரண்டையும் இல்லாமல் செய்ய வேண்டும் என தி.மு.க., மூத்த தலைவர்கள் பலரும், கட்சித் தலைமைக்கு ஆலோசனை கூறி வருகின்றனர்.

நான்கு அணிகள்

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., உடன் கூட்டணி வாய்ப்பு இருப்பதை சுட்டிக் காட்டி, காங்., தரப்பில் தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதை ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் யாரும் விரும்பவில்லை. பீஹார் தேர்தலில், காங்., படு தோல்வி அடைந்ததால், தி.மு.க., கூட்டணியில் தனக்கான முக்கியத்துவத்தை காங்., இழந்திருக்கிறது. இந்த சூழலிலும், கள நிலவரம் உணராமல் செயல்படும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என, கட்சித் தலைமைக்கு தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூறி உள்ளனர். பீஹார் போலவே, தமிழகத்திலும் பலம் இல்லாத அக்கட்சியை கூட்டணியில் வைத்திருப்பது குறித்து, தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டணி பேச்சில் முரண்டு பிடித்தால், காங்.,கை கழற்றி விடவும் தி.மு.க., தரப்பில் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையே, த.வெ.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், அது தி.மு.க., கூட்டணிக்கு வலுவான எதிர்ப்பாக அமையும். ஆனால், காங்.,கை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால், அக்கட்சி த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும். இதனால், சீமான் தலைமையிலான நா.த.க., உட்பட நான்கு அணிகள் தேர்தல் களத்தில் இருக்கும். அது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என்ற யோசனையும் தி.மு.க., தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்.,கை கூட்டணிக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற சிந்தனை தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ