சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி, சி.பி.ஐ., விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, விவசாயத்தை கவனித்து, நிலத்தை பாதுகாக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார். திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு: முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகை, விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் பழனிசாமி, பொதுப் பணித் துறை அமைச்சராக பதவி விகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த கல்லுாரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவக் கல்லுாரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. மத்திய அரசின், 60 சதவீத நிதி பங்களிப்புடன், 11 மருத்துவக் கல்லுாரிகள் கட்டப்பட்டு உள்ளதால், இந்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'உயர் நீதிமன்ற அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும் அல்லது வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தியதுடன், 'என்ன தொழில் செய்கிறீர்கள்; எவ்வளவு நிலம் உள்ளது; என்ன சாகுபடி செய்கிறீர்கள்' என, கேள்வி எழுப்பினார். 'அதற்கு பதிலளித்த மனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வதாகக் கூறினார். இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தை பாதுகாக்கும்படி அறிவுறுத்திய தலைமை நீதிபதி, வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும்படி கூறி, வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.