புதுடில்லி: நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு (நாளை நவம்பர் 19) பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில், பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புனித ஆலயம் மற்றும் மகாசமாதிக்குச் சென்று, மரியாதை செலுத்துவார். காலை 10:30 மணியளவில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்வில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகளை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகளின் தொகுப்பை அவர் வெளியிடுவார். நிகழ்ச்சியின் போது அவர் கூட்டத்தில் உரையாற்றுவார்.அதன்பிறகு, பிரதமர் கோவையில் மதியம் 1:30 மணியளவில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு பிஎம்-கிசான் திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் வெளியிடுவார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்ற உள்ளார். தமிழில் பதிவு
இது தொடர்பாக, தமிழில் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.